தாராபுரம் கஞ்சா சாக்லேட் விற்பனை வட மாநில தொழிலாளி கைது!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொட்டியம்பாளையம் பகுதியில் 'கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜஜாபூர் மாவட்டம் பிங்கர்புன் பகுதியைச் சேர்ந்த தீபா பரத் பாடி (வயது 32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 3.கிலோ 500 கிராம் எடை உள்ள 18 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், லாரி ஓட்டுநர்கள் மற்றும் தேங்காய் மட்டைமில், செங்கல்சூளை, நூல்மில், பனியன்கம்பெனி போன்றவற்றில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருடன் தொடர்புடைய நபர்கள் வேறு யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment