தாராபுரம் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும், தொகுதி மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தாராபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிா் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, முதல்வரின் காலை உணவுத்திட்டம், வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 20 ஆண்டுகளாக காத்திருந்த விவசாயிகளுக்கு 1 லட்சம் பம்பு செட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தற்போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்ட தொழிலாளா்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மக்கள் நல திட்டங்கள் தொடரவும், தொகுதி மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும் திமுக வேட்பாளா் பிரகாஷுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்வில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர் இல.பத்மநாபன் தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன்,கிளைக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கழகத்தின் இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள்,நகர கழக நிர்வாகிகள், கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment